விக்கிலீக்ஸ் இணையதளம் மூலம் அமெரிக்காவின் ரகசிய தகவல் தொடர்பாடல்களை அசாஞ் அம்பலப்படுத்தியிருந்தார்.
விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ் லண்டனிலுள்ள ஈக்வடோர் தூதரகத்திலிருந்து விரைவில் வெளியேறவுள்ளதாக அறிவித்துள்ளார். ஜூலியன் அசாஞ் வெளியேறுகின்ற போதும், அதற்கான காரணத்தை இன்னமும் அறிவிக்கவில்லை. அவர் இதய மற்றும் நரம்புத் தளர்ச்சி நோயினால் அவதிப்பட்டு வருவதாக அண்மைய நாட்களாக தொடர்ந்து செய்திகள் வெளிவந்தபடியுள்ளன.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஜூலியன் அசாஞ் லண்டனிலுள்ள ஈக்வடோர் தூதரகத்தில் தங்கியிருந்துவருகின்றார். தூதரகத்தை விட்டு வெளியில் வந்தால் கைதுசெய்யப்பட்டு சுவீடனிடம் ஒப்படைக்கப்படக்கூடிய நிலையிலும் அவர் உள்ளார். சுவீடனில் நடந்துள்ளதாகக் கூறப்படும் பாலியல் தாக்குதல் சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் அசாஞ் மீது உள்ளன. அவருக்கு ஈக்வடார் அரசு தொடர்ந்தும் பாதுகாப்பு வழங்கும் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ரிக்கார்டோ பாட்டினோ கூறினார்.