Breaking
Fri. Sep 20th, 2024
தமது மகன் கைது செய்யப்பட்டமை காரணமாக மஹிந்த ராஜபக்ச தம்மீது அவதூறான குற்றங்களை சுமத்தி வருவதாக முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மகளும், அமைச்சர் சஜித் பிரேமதாசவின் சகோதரியுமான துலாஞ்சலி பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், உங்களது மகன், யோசித்த ராஜபக்ச குற்றவாளியா? குற்றமற்றவரா? என்பதை நீதிமன்றமே தீர்மானிக்கும். எனினும் மகன் கைது செய்யப்பட்டமைக்காக அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை தம்மீது சுமத்த வேண்டாம் என்று துலாஞ்சலி கோரியுள்ளார்.

தமது பெற்றோரான ரணசிங்க பிரேமதாசவும் ஹேமா பிரேமதாசவும், தம்மையும் தமது சகோதரரரையும் சட்டத்தை மதிக்கும் வகையில், கடவுளை மதிக்கும் வகையிலும் வளர்த்துள்ளனர்.

இந்தநிலையில் உங்களது அறிவுரை தமக்கு தேவையில்லை. நீங்கள் உங்களது பிள்ளைகளுக்கு அவர்களுக்கு வாழ்க்கையை சமூகத்துக்கு ஏற்றாற்போல வாழ்வதற்கு அறிவுரை கூறுமாறு துலாஞ்சலி, மஹிந்தவிடம் கூறியுள்ளார்.

தாமும் தமது சகோதரர் சஜித் பிரேமதாசவும் பிரதமர் பிள்ளைகளாகவும் ஜனாதிபதியின் பிள்ளைகளாகவும் இருந்திருக்கிறோம். எனினும், தாம் துஸ்பிரயோகங்களில் ஈடுபடவில்லை.

போலி நாணய குற்றச்சாட்டு விடயத்தில் தாம் ஒரு அப்பாவி என்பதை சட்டத்தரணியான மஹிந்த ராஜபக்ச அறிந்திருக்க வேண்டும். இதனை விடுத்து உங்களது ஆட்சியின்போது தமக்கு தமக்கு மன்னிப்பு வழங்கியதாக நீங்கள் கூறி வருவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் என்றும் துலாஞ்சலி குறிப்பிட்டுள்ளார்

குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் வழக்கு தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது. எனவே, அது தொடர்பில் கலந்துரையாட முடியாது. எனினும், நாட்டின் சட்டத்தை ஏற்றுக்கொள்ளத் தயார் என்று துலாஞ்சலி தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் நீதிமன்றத்தின் முன்னால் உள்ள விடயம் தொடர்பில் தொடர்ந்தும் நீங்கள் கருத்துக் கூறி வருவது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்பதை உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புறேன் என்றும் துலாஞ்சலி, மஹிந்தவுக்கான கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

By

Related Post