Breaking
Wed. Oct 23rd, 2024

உளவுத்துறை தகவல்களை பகிர்ந்துக்கொள்ள பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே புதிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இருநாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக நீடித்த பூசல்கள் மற்றும் தவறான புரிதல்கள் காரணமாக இதுதொடர்பான உடன்பாடு ஏற்படாமல் இருந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப், ராணுவ தலைவர் ரஹீல் செரீப் மற்றும் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. தலைவர் ரிஸ்வான் அக்தார் ஆகியோர் கடந்த வாரம் ஆப்கானிஸ்தான் சென்றபோது இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது என்று பாகிஸ்தான் ராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது.

தலிபான் தீவிரவாதிகளை அழிக்க மேலும் ஒருங்கிணைந்து செயல்படவும் இருநாடுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. உளவுத்துறை தகவல்களை பகிர்ந்துக் கொள்ளுதல், இருதரப்பும் உளவுத்துறை விவகாரங்களில் இணைந்து பணியாற்றுதல் ஆகியவை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே கையெழுத்து ஆனது என்று பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் அசிம் பாஜ்வா தெரிவித்துள்ளார். இருதரப்பு உளவுத்துறையும், தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் இணைந்து பணியாற்றுதல் மற்றும் விசாரணை செய்வது ஆகியவை தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்து ஆகியுள்ளது.

இருநாடுகள் இடையே பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்களும் கையெழுத்து ஆகியுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் உளவுத்துறைக்கு, பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. இனி பயிற்சி அளிக்கும் என்று கூறப்படுகிறது.

Related Post