Breaking
Sat. Sep 21st, 2024

தேன் தடவிய பேச்சால் கியூபா மக்களை திசைதிருப்ப முயலும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் கருத்துக்கு புரட்சியாளரும், கியூபா முன்னாள் அதிபருமான பிடல் காஸ்ட்ரோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவும், அதன் அண்டை நாடான கியூபாவும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக பரம எதிரிகளாக இருந்தன. 1959-ம் ஆண்டு அமெரிக்காவின் ஆதரவுடன் அங்கு நடைபெற்றுவந்த ஆட்சியை பிடெல் காஸ்ட்ரோ தலைமையிலான கம்யூனிஸ்ட் புரட்சிப்படை தூக்கியெறிந்த பின்னர் இருநாடுகளுக்கும் இடையில் தீராப்பகை நிலவிவந்தது.

இந்நிலையில், கியூபாவுடன் நட்பு பாராட்டுவது என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முடிவு செய்து அதற்கான முயற்சிகளையும் செய்தார். 54 ஆண்டுகள் கழித்து அமெரிக்காவில் கியூபா நாட்டு தூதரகம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்டது. அதேபோன்று கியூபாவில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஒபாமா கியூபாவுக்கு செல்வார் என்று பல மாதங்களாக கூறப்பட்டது.

இந்நிலையில், தனது மனைவி மற்றும் இருமகள்களுடன் ஒபாமா கடந்த 20-ம் தேதி கியூபா வந்தடைந்தார். கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் தம்பியான தற்போதைய அதிபர் ரவுல் காஸ்ட்ரோவை, ஒபாமா சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு நல்லுறவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

உடல்நலம் குன்றிய நிலையில் சக்கர நாற்காலியின் துணையின்றி நடமாட முடியாத நிலையில் இருக்கும் கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அதிபருமான பிடல் காஸ்ட்ரோவை ஒபாமா சந்தித்துப் பேசுவார் என இதற்கு முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.

அந்த தகவலை அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

பேச்சுவார்த்தைக்கு பின்னர், ஒபாமாவும் ரவுல் காஸ்ட்ரோவும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது, அமெரிக்காவைப் பற்றி பெருமைபொங்க பேசிய ஒபாமா, அமெரிக்காவில் கருத்துரிமை, பேச்சுரிமை மற்றும் மதவழிபாட்டு உரிமைகள் சிறப்பாக நிலைநாட்டப்படுவதாக குறிப்பிட்டார். இது அமெரிக்காவுக்கு உரிய உயர்பண்புகள் அல்ல, உலகம் முழுமைக்குமான உயரிய பண்புகளாகும் என்றும் அவர் கூறினார்.

ஒபாமாவும் ரவுல் காஸ்ட்ரோவும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது வெளிநாட்டு ஊடகங்களை சேர்ந்த நிருபர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது……

குறிப்பாக, கியூபா நாட்டு சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்பான கேள்வியின்போது ஆவேசம் அடைந்த அவர், ‘இப்போதே சொல்லுங்கள்? எத்தனைபேர் எங்கள் நாட்டு சிறைகளில் அரசியல் கைதிகளாக இருக்கிறார்கள்?, அவர்களின் பெயர்களை சொல்லுங்கள்? இன்றிரவுக்குள் விடுதலை செய்கிறேன் என அவர் கோபமாக கூறினார்.

பின்னர், கியூபாவில் மனித உரிமைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக பேசப்படுகிறதே? என்ற மற்றொரு நிருபரின் கேள்விக்கு பதிலளித்த காஸ்ட்ரோ, உலகில் உள்ள எத்தனை நாடுகள் 61 வகை மனித உரிமைகளையும் முழுமையாக கடைபிடிக்கின்றன என்று உங்களுக்கு தெரியுமா?, உலகில் உள்ள எந்த நாடும் இந்த 61 வகை மனித உரிமைகளையும் முழுமையாக கடைபிடிக்கவில்லை என்பது எனக்கு நன்றாக தெரியும் என கூறினார். அப்போது ஒபாமாவின் முகம் இறுகிய நிலையில் காணப்பட்டது.

இந்நிலையில், கியூபாவில் மக்களுக்கு உரிய சுதந்திரம் இல்லை என்னும் பொருள்பட தலைநகர் ஹவானாவில் ஒபாமா வெளியிட்ட கருத்துக்கு அந்நாட்டின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ(89) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, பிரபல பத்திரிகை ஒன்றில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறியுள்ளதாவது:-

ஒபாமாவின் தேன் தடவிய வார்த்தைகளை கியூபா மக்கள் பொருட்படுத்த வேண்டாம். அவரது பேச்சை கேட்டவுடன் நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் மாரடைப்பு ஏற்படும் அபாயம் தோன்றியதாகவே அனைவரும் கருதுகின்றனர். நமது நாட்டு மக்களின் அறிவாற்றல் மற்றும் உழைப்பால் நமக்கு தேவையான உணவு உள்ளிட்ட அனைத்து தேவைகளிலும் நாம் தன்னிறைவை அடைந்துள்ளோம். அவர்கள் (அமெரிக்கா) சாம்ராஜ்ஜியத்தின் அரசு தரும் எந்த அன்பளிப்பும் எங்களுக்கு தேவையில்லை.

பிறநாடுகளின் தயவு இல்லாமல் சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அம்சங்களில் கியூபா அடைந்துள்ள வளர்ச்சியைப் பற்றி அறியாமல், கியூபா நாட்டு அரசியலைப்பற்றி வியாக்யானம் பேசும் ஒபாமா, உலக நாடுகளின் தடை நடைமுறையில் இருந்தபோதே தென்னாப்பிரிக்காவுக்கு அமெரிக்கா அணு ஆயுதங்களை வழங்கிய பழைய கதையைப் பற்றி முதலில் தெளிவாக விளக்க வேண்டும்.

மேற்கண்டவாறு அந்த கட்டுரையில் காஸ்ட்ரோ குறிப்பிட்டுள்ளார்.

By

Related Post