Breaking
Sat. Sep 21st, 2024

வங்காளதேச தலைநகர் டாக்காவில் வெளிநாட்டினர் அதிகம் செல்லும் ஓட்டலில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய மாணவி தருஷி ஜெயின் என்ற இந்திய மாணவி உள்பட 22 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலில் தொடர்புடையவர்களில் ஒருவரான ரோகன் இம்தியாஸ், மும்பையை சேர்ந்த இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களை சமூக வலைத்தளத்தில் பரப்பி இருந்தார். ஜாகிர் நாயக்கின் வன்முறை பேச்சால் தீவிரவாத தாக்குதலுக்கு வங்காளதேச முஸ்லிம்கள் தூண்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே ஜாகிர் நாயக்கின் பேச்சை ஆய்வு செய்யுமாறு இந்தியாவை வங்காளதேச அரசு கேட்டுக் கொண்டது.

ஜாகிர் நாயக்கிற்கு இங்கிலாந்து, கனடாவில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தற்போது மத நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மக்கா நகருக்கு சென்றுள்ள ஜாகிர் நாயக் விரைவில் மும்பை திரும்புவார் என கூறப்படுகிறது.

வங்காளதேசம் நாட்டின் தலைநகரான டாக்காவில் உள்ள ஒரு ஓட்டலில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியாவை சேர்ந்த ஜாகிர் நாயக்கின் மதப் பிரசாரம்தான் தூண்டுகோலாக இருந்தது என வெளியாகிவரும் குற்றச்சாட்டுகளுக்கு ஜாகிர் நாயக் மறுப்பு தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், ஜாகிர் நாயக்கின் பிரச்சாரங்களை ஒளிபரப்பி வரும் அவருக்கு சொந்தமான ‘பீஸ் டி.வி’ சேனலுக்கு வங்காளதேசம் அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையை மீறி உள்நாட்டில் யாராவது அந்த சேனலை ஒளிபரப்பினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் மக்களின் மனங்களில் வன்முறையை தூண்டும் வகையில் பிரசாரம் செய்வதாக குற்றம்சாட்டப்படும் சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக் மெக்காவில் இருந்து இந்தியாவுக்கு திரும்பியதும் அவரை கைது செய்ய வேண்டும் என சிவசேனா வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், ’உம்ரா’ செய்வதற்காக சவுதி அரேபியாவுக்கு சென்ற ஜாகிர் நாயக் அங்கிருந்தபடியே ஆப்பிரிக்க நாடுகளில் சில பிரச்சார கூட்டங்களில் பங்கேற்க சென்றுவிட்டதாக தெரியவந்துள்ளது.

தற்போது ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஜாகிர் நாயக், நேற்று (வியாழக்கிழமை) இந்திய ஊடகங்களுக்கு பேட்டியளிக்கவுள்ளதாக அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.

ஆப்பிரிக்காவில் இருந்தபடி, ‘ஸ்கைப்’ வழியாக ஜாகிர் நாயக் அளிக்கும் பேட்டி மும்பை ஒர்லி பகுதியில் உள்ள வர்த்தக மைய வளாகத்தில் (டிரேட் சென்ட்டர்) நேரடியாக ஒளிபரப்பாகும். இந்த பேட்டியில் பிரபல பாலிவுட் நடத்திரங்கள், வழக்கறிஞர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசுசாரா தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், நேற்றைய பேட்டி திடீரென ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று பகல் சுமார் 12 மணியளவில் ‘ஸ்கைப்’ வழியாக ஜாகிர் நாயக்கின் ‘லைவ்’ பேட்டி நடைபெற்று வருகிறது.

இதில் பேசிய ஜாகிர் நாயக், அப்பாவி மக்களை குறிவைத்து நடத்தப்படும் தற்கொலைப்படை தாக்குதல்கள் கண்டனத்துக்குரியவை என தெரிவித்தார். மேலும், எந்த தீவிரவாதியையும் நான் தூண்டி விடவில்லை, நான் அமைதியின் தூதர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வங்காளதேசத்தில் நடந்த தாக்குதல் தொடர்பாக நடந்துவரும் விசாரணையில் அங்கம்வகிக்கும்படி என்னை யாரும் அணுகவில்லை. அப்படி என்னை அணுகினால் தேவையான ஒத்துழைப்பை அளிக்க நான் தயாராக இருக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

By

Related Post