Breaking
Sun. Sep 22nd, 2024

பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரின் அருகேயுள்ள கவுட்டா பகுதியில் அணு ஆயுதங்களை தயாரிக்க தேவையான யுரேனியத்தை செறிவூட்டும் நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையத்தின் தலைமை ஆராய்ச்சியாளராக முன்னர் பொறுப்புவகித்த அப்துல் காதீர் கான்(80) பாகிஸ்தானின் அணு ஆயுதங்களின் பிதாமகன் என கருதப்படுகிறார்.

பாகிஸ்தான் முதன்முறையாக கடந்த 28-5-1988 அன்று ஐந்து அணுகுண்டுகளை பூமிக்கு அடியில் வெடிக்கவைத்து பரிசோதனை நடத்தியது. இந்த பரிசோதனைகளின் பாகிஸ்தான் பெரிய அளவில் வெற்றியை காட்டியது. உலகின் வல்லரசு நாடுகளுக்கு இணையான ஆயுதபலம் தன்னிடம் இருப்பதாக கொண்டாடி, மகிழ்ந்தது.

இந்த அணுகுண்டு சோதனைக்குப்பிறகு ஒரு மந்திரிக்கு உரித்தான மரியாதையுடன் ‘ஏ.கியூ.கான்’ என்றழைக்கப்பட்டு பாகிஸ்தானில் கவுரவமாக வலம்வந்த அப்துல் காதீர் கான், பின்நாட்களில் வெளிநாடுகளுக்கு அணுகுண்டுகளை தயாரிக்கும் ரகசியத்தை விற்றதாக குற்றம்சாட்டப்பட்டு அதிபர் பர்வேஸ் முஷரப்பின் ஆட்சிக்காலத்தில் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டார். பின்னர், கோர்ட்டின் தலையீட்டால் அவர் சுதந்திரமாக நடமாடும் அனுமதியை பெற்றார்.

இந்நிலையில், பாகிஸ்தான் முதன்முறையாக அணுகுண்டுகளை பரிசோதித்த நாளின் 18-வது ஆண்டுவிழா அந்நாட்டின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நேற்று  (28) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அணு விஞ்ஞானி அப்துல் காதீர் கான், கடந்த 1984-ம் ஆண்டிலேயே அணு ஆயுதங்களை பரிசோதிக்க நாங்கள் தயாராக இருந்தோம் என்று கூறினார்.

ஆனால், அணுகுண்டு சோதனையில் ஈடுபட்டால் உலக நாடுகள் நம்மீது பொருளாதார தடைகளை விதித்து விடும். மேலும் நமது நாட்டின்மீது போர் தொடுக்கவும் கூடும் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் அதிபர் ஜியாவுல் ஹக், அந்த திட்டத்தை  தடுத்து விட்டார். இல்லாவிட்டால், 1984-ம் ஆண்டிலேயே நாம் அணுஆயுத வலிமைபெற்ற வல்லரசாக உயர்ந்திருப்போம் என கான் நேற்று குறிப்பிட்டார்.

மேலும், ராவல்பிண்டி நகரின் அருகே இருக்கும் கவுட்டா அணு உலை பகுதியில் இருந்து இந்தியாவின் தலைநகரான டெல்லியை ஐந்தே நிமிடங்களுக்குள் நம்மால் தாக்க முடியும் எனவும் இந்நிகழ்ச்சியின்போது அவர் கூறியுள்ளார்.

By

Related Post