Breaking
Wed. Oct 23rd, 2024

 அபூ அஸ்ஜத் –

பௌத்த மதம்  சமாதானம்,இன உறவு ,விட்டுக் கொடுப்பு என்பன போன்ற ஏனைய மதத் தவர்களுக்கு பங்கம் விளைவிக்காத நல்ல கொள்கையினையே வலியுறுத்திவருகின்றது.பௌத்தர்களாக இருந்தாலும்,இஸ்லாமியர்களாக இருந்தாலும்,ஏனைய மதத் தவர்களாக இருந்தாலும்  எல்லோரும் மனிதர்கள் என்ற உயர் கொள்கையினை எல்லா சமூகங்களும் ஏற்றுக்கொண்டுள்ள வேளையில் இந்த நாட்டில் அண்மைய காலமாக இந்த தத்துவத்தை மிஞ்சி பௌத்த மதத்தின் பெயரால் சில இனவாத சக்திகள் மேற்கொண்டுவரும் அடக்கு முறைகளும்,அட்டூழியங்களும் எல்லை கடந்து செல்வதை காணமுடிகின்றது.

சமூக வலைத்தளங்களை மையப்படுத்தி முஸ்லிம்களுக்கு எதிராக ராவண பலய,பொதுபலசேனா போன்ற கடும் இனப் போக்கு சக்திகள் மீண்டும் தொடர் தாக்குதலை ஆரம்பித்துள்ளதை  அவதாணிக்க முடிகின்றது.இந்த நிலையில் இன்று இந்த சக்திகளுக்கு அவலாக கிடைத்துள்ளவை ” வடக்கு  முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றமும்,வில்பத்து காட்டுப்பகுதியும்” என்னும் தலைப்பாகும்.இந்த தலைப்பின் பிரதான நபராக அமைச்சர் றிசாத் பதியுதீன் இலக்கு வைக்கப்பட்டுள்ளார்.உண்மையில் இந்த இலக்கு றிசாத் பதியுதீனுக்கா என்று ஆராய்ந்து பார்த்தால் இல்லவே இல்லை அது இந்த நாட்டு முஸ்லிம் சமூகத்திற்கு என்பதை அறிந்து கொள்ளமுடிகின்றது.

வில்பத்து காட்டினை  ஆக்கிரமித்து முஸ்லிம்களை குடியேற்றம்  செய்வதாகவே பிரசாரங்களை இந்த சிங்கள கடும் போக்காளர்கள்

மேற்கொண்டுவருகின்றனர்.இவர்கள் செயற்பாட்டின் பின்னணியில் பெரும் போக்கு திட்டமிடமப்பட்ட சக்திகளின் கூட்டுடன்,முஸ்லிம் எதிர் அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதிகளும் இருக்கின்றது என்ற உண்மை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சக்திகளுடன் நெருக்கமான உறவை கொண்டுள்ள முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அவரின் அணியினர் இதனை இயக்கிக் கொண்டிருக்கின்ற விடயமும் அறியப்படாதவிடயமல்ல.

வடக்கு முஸ்லிம்கள் குறைந்ததது ஒரு இலட்சம் பேரை அவர்களது தாயகத்தல் மீள்குடியேற்ற முடியாத அளவுக்கு கடந்த அரசாங்கம் இருந்திருக்கின்றது என்றால் இதனது உள் நோக்கம் தான் என்ன என்பதை வெளிப்படையாக அறிந்து கொள்ள முடிகின்றது.

எல்லாத் தேர்தலிகளிலும் மஹிந்த ராஜபக்ஷவின் அரசுக்கு ஆதரவு வழங்கிய வட புல முஸ்லிம்கள் இம்முறை எதற்காக மஹிந்தவுக்கு எதிராக வாக்களித்தனர் என்பதைக் கூட புள்ளி விபரங்களுடன் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு முஸ்லிம் சமூகத்தின்  மீதான வெறுப்பு அவரை ஆட் கொண்டுள்ளதை காணமுடிகின்றது.

பொதுபலசேன ஹலால் முதல்  முஸ்லிம் பெண்களின் ஆடை வரை செய்து வந்த அட்டூழியங்களை கட்டுப்படுத்த அப்போதைய ஜனாதிபதிக்கு முடியாமல் போனது சர்வாதிகார அரசாங்கத்தின் தலைவரால் இதனை செய்ய முடியவில்லையா ?அல்லது இந்த செயலின் பின்னணியில் இருப்பது அவர் தான் என்ற உண்மை மக்களுக்கு தெரியாது என்று அவர் நினைத்துக் கொண்டாரா ?

எள்ற கேள்விகளுக்கு பதிலை தற்போதைய அரசாங்கத்தின் நல்லாட்சி மூலம் வெளிவந்துள்ளது.

பொதுபலசேனாவின் அட்டகாசங்கள் தொடர்பில் அதனது செயலாளரை கைது செய்யும் பிடியானை நீதி மன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மையினை கூறுகின்றது.

வெறுமனே ஏமாற்றுக்காக முஸ்லிம் தலைமைகளை அரவணைப்பது போன்று கூறிவந்த அப்போதைய ஆட்சியாளர்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை என்பது உண்மையாகும்.இந்த இனவாத அமைப்புக்களுக்கு தீனிபோட்டு அவர்களை போஷிக்கும் போஷகர்களாக கடந்த கால ஆட்சியாளர்கள் இன்னும் இருக்கின்றார்கள்.

இனி வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் எவ்வாறு சிங்கள மக்களுக்க சவாலாக போகின்றது என்பது தொடர்பில் எமது பார்வையினை நாம் செலுத்தவது தேவையானதொரு விடயமாகும்.முன்னால் ஜனாதிபதி உள்ளிட்ட அவரது அணியினர் வடக்கில் தமிழ்,முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் இடம் பெறக் கூடாது என்பதற்காக வடக்கில் உள்ள காணிகளை கபளீகரம் செய்து அதில் சிங்கள குடியேற்றங்களை செய்து வந்தனர்.

குறிப்பாக கிளிநொச்சி,வவுனியா மாவட்டங்களில் இன்றும் இந்த சிங்கள குடியேற்றங்கள் காணப்படுகின்றன.வன்னி மாவட்டத்தை சாராத பிற மாவட்டத்தை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  சிங்கள மக்கள் இவ்வாறு குடியமர்த்தப்பட்டனர்.அதே போன்று இரானுவ மற்றும் அதிகார பலங்களை வைத்துக் கொண்டு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு எதிராக மெற்கொண்ட தடைகள் ஏராளம்.

மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச சபை என்பது முஸ்லிம் தலைவரைக் கொண்ட சபையாகும்.இருந்த போதும் இந்த சபைக்குட்பட் பிரதேச செயலகப் பிரிவு தான் முசலியாகும்.இந்த முசலியில் அமைந்திருக்கும் கிராமங்கள் தான்

மறிச்சுக்கட்டி,கரடிக்குளி,பாலக்குளி.கொண்டச்சி,கொக்குபடையான் உள்ளிட்ட கிராமங்கள். இங்கு வாழ்ந்த முஸ்லிம்கள் 1990 இல் பலவந்தமாக விரட்டியடிக்கப்பட்டனர்.தற்போது இவர்கள் தமது பிரதேசத்துக்கு வந்த போது அங்கு இந்த மக்கள் கண்டது காடுகளையும்,அழிவுகளையும்.இதனையடுத்து இந்த மக்கள் தமது வீடுகளை அமைத்துக் கொள்ள காடுகளை துப்பரவு  செய்து வீடுகளை நிர்மாணிக்கின்ற போது இந்த இனவாதிகளின் கூட்டு செய்து வரும் இனப் பிரசாரத்துக்கு எல்லையே இல்லை.

இதிலிருந்து இந்த முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றுபடுவோம்.

Related Post