Breaking
Fri. Mar 14th, 2025

அமெரிக்க பத்திரிகையாளர் ஜேம்ஸ் போலி தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட செயல் ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆனால், நாங்கள் ஈராக்கில் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறோமோ அதை நிறுத்தப் போவதில்லை. அஞ்சப் போவதில்லை. மக்களைக் காக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபடுவோம். எந்தக் கடவுளும் இந்த அக்கிரமச் செயலை பொறுத்துக் கொள்ள மாட்டார் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார். அமெரிக்க பத்திரிகையாளர் ஜேம்ஸ் போலி கொடூரமாக தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டதற்கு அவர் கடும் கண்டனமும் அதிர்ச்சியும் தெரிவித்தார்.

ஒட்டுமொத்த உலகமும் இந்த கொடூரமான செயலால் அதிர்ந்து நிற்கிறது. ஆனால், அமெரிக்காவின் மக்கள் காக்கும் பணி தொடரும். ஈராக்கிலும், சிரியாவிலும் நாங்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறோமோ அது தொடரும், தொடர்ந்து உறுதியுடன் செய்வோம், கவனத்துடன் செய்வோம்.  நான் ஜேம்ஸ் போலியின் குடும்பத்தினரிடம் போனில் பேசினேன். அவர்களது இழப்பால் ஒட்டுமொத்த அமெரிக்கர்களின் மனங்களும் சிதறிப் போயுள்ளதாக தெரிவித்தேன். ஜேம்ஸ் போலி ஒரு பத்திரிக்கையாளர், மகன், சகோதரன், நல்ல நண்பன், நல்ல குடிமகன். அவரது மரணம் ஒட்டுமொத்த மனித குலத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ் இந்த உலகை அழிக்க வைந்த புற்றுநோய். நகரங்களையும், கிராமங்களையும் பிடித்து, அழித்து, அப்பாவி மக்களை கொன்று குவித்து வரும் கோழைகள். அப்பாவி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களைச் சித்திரவதை செய்து அடிமைகளாக்கி வரும் கோழைகள். எந்த மதமும் அப்பாவிகளைக் கொல்லச் சொல்லுவதில்லை, ஜேம்ஸ் போலிக்கு நடந்ததை எந்த கடவுளும் ஏற்க மாட்டார். ஒவ்வொரு நாளும் நடந்து வருவதை எந்தக் கடவுளும் ஏற்க மாட்டார். இதுபோன்ற குற்றங்களை இழக்கும் நபர்கள் நிச்சயம் தோற்பார்கள். எதிர்காலத்தில் மக்கள்தான் வெல்வார்கள். அழிப்பவர்கள் வெல்ல முடியாது, ஆக்கப்பூர்வமானவர்கள்தான் வெல்வார்கள் ஒபாமா கூறினார்.

Related Post